நேர்மை வாரம் 2026 – நாள் 04
செயற்பாட்டு உட்கட்டமைப்பு சேவை வழங்கல் மற்றும் உழைப்பு நேர்மையை வெளிப்படுத்தும் நாள்
அரச உத்தியோகத்தர்களுக்கான நேர்மைக் கலாசார விழிப்புணர்வுக் கருத்தரங்கு
30.07.2026
"நேர்மைக் கலாசாரம் – தூய்மையான இலங்கை"தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட நேர்மை வாரம் 2026 நிகழ்வுகளின் நான்காவது நாள் நிகழ்ச்சியாக, கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான நேர்மைக் கலாசார விழிப்புணர்வுக் கருத்தரங்கு இன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வு கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் திருமதி K. அமலினி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், சமுர்த்தி முகாமையாளர் உள்ளிட்ட நிர்வாக உத்தியோகத்தர்களும், அலுவலகஅனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
கருத்தரங்கின் வளவாளராக ஓய்வு பெற்ற முன்னாள் பிரதேச செயலாளர் திரு. K. சித்திரவேல் ஐயா அவர்கள் கலந்து கொண்டு, அரச சேவையில் நேர்மை, பொறுப்புணர்வு, வெளிப்படைத் தன்மை, ஒழுக்கம் மற்றும் மக்கள் மையப்படுத்தப்பட்ட சேவையின் முக்கியத்துவம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். மேலும், அரச உத்தியோகத்தர்கள் தமது சேவையை நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் முன்னெடுப்பதன் மூலம் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுக்கொள்வதுடன், சிறந்த பொதுச் சேவையை உருவாக்க முடியும் என்பதையும் வலியுறுத்தினார்.
அத்துடன், ஊழலற்ற நிர்வாகம், நன்னடத்தை, தொழில்சார் ஒழுக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் திறன் மிக்க சேவை வழங்கல் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் பயனுள்ள கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன. கலந்துகொண்ட உத்தியோகத்தர்கள் தங்களது அனுபவங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டு, நேர்மையை அடிப்படையாகக் கொண்ட சேவை பண்பாட்டை மேலும் வலுப்படுத்துவதன் அவசியத்தை உணர்ந்தனர்.
"வெளிப்படையான நேர்மைமிக்க செயற்பாட்டு வலையமைப்பு "
















