News & Events
- பிரிவு: News & Events
08.08.2026 அன்று “Attama” வேலைத்திட்டத்தின் கீழ், காயங்கேணி பகுதியில் கடற்கரை சுத்தப்படுத்தும் சிரமதானப் பணி சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வின் மூலம் கடற்கரைப் பகுதிகளில் காணப்பட்ட கழிவுகள் அகற்றப்பட்டு, சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் மற்றும் பொதுமக்களிடையே தூய்மையான சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நமது இயற்கை வளங்களை பாதுகாப்பது ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும். கடற்கரைகளில் குப்பைகளை வீசாமல், கழிவுகளை உரிய முறையில் அகற்றி, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அனைவரும் பங்களிப்போம்.

- பிரிவு: News & Events
மாங்கேணி கிராமத்தில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விசேட கலந்துரையாடல்
31.07.2026 அன்று மாங்கேணி கிராமத்தில் அண்மைக் காலமாக பதிவாகி வரும் சிறுவர்கள் மற்றும் பெண்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விசேட கலந்துரையாடலொன்று மாங்கேணி பாடசாலையில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக நலனில் அக்கறை கொண்ட தரப்பினர்கள் கலந்து கொண்டு, கிராமத்தில் நிலவும் தற்போதைய நிலைமைகள், பிரச்சினைகளுக்கான காரணிகள், அவற்றைத் தடுக்கும் வழிமுறைகள் மற்றும் ஒருங்கிணைந்த செயற்பாடுகள் குறித்து விரிவாக கலந்துரையாடினர்.
மேலும், சம்பவங்கள் இடம்பெற்றதாகக் கூறப்படும் பகுதிகளுக்கு களத்தரிசிப்புகளும் மேற்கொள்ளப்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலைமைகள் நேரடியாக அவதானிக்கப்பட்டன. இதன் மூலம் பிரச்சினைகளின் உண்மை நிலை மதிப்பீடு செய்யப்பட்டதுடன், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.
சிறுவர்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒருங்கிணைந்த செயற்பாடுகளை வலுப்படுத்துவதும் இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாக அமைந்தது.

- பிரிவு: News & Events
நேர்மை வாரம் 2026 – நாள் 04
செயற்பாட்டு உட்கட்டமைப்பு சேவை வழங்கல் மற்றும் உழைப்பு நேர்மையை வெளிப்படுத்தும் நாள்
அரச உத்தியோகத்தர்களுக்கான நேர்மைக் கலாசார விழிப்புணர்வுக் கருத்தரங்கு
30.07.2026
"நேர்மைக் கலாசாரம் – தூய்மையான இலங்கை"தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட நேர்மை வாரம் 2026 நிகழ்வுகளின் நான்காவது நாள் நிகழ்ச்சியாக, கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான நேர்மைக் கலாசார விழிப்புணர்வுக் கருத்தரங்கு இன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வு கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் திருமதி K. அமலினி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், சமுர்த்தி முகாமையாளர் உள்ளிட்ட நிர்வாக உத்தியோகத்தர்களும், அலுவலகஅனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
கருத்தரங்கின் வளவாளராக ஓய்வு பெற்ற முன்னாள் பிரதேச செயலாளர் திரு. K. சித்திரவேல் ஐயா அவர்கள் கலந்து கொண்டு, அரச சேவையில் நேர்மை, பொறுப்புணர்வு, வெளிப்படைத் தன்மை, ஒழுக்கம் மற்றும் மக்கள் மையப்படுத்தப்பட்ட சேவையின் முக்கியத்துவம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். மேலும், அரச உத்தியோகத்தர்கள் தமது சேவையை நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் முன்னெடுப்பதன் மூலம் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுக்கொள்வதுடன், சிறந்த பொதுச் சேவையை உருவாக்க முடியும் என்பதையும் வலியுறுத்தினார்.
அத்துடன், ஊழலற்ற நிர்வாகம், நன்னடத்தை, தொழில்சார் ஒழுக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் திறன் மிக்க சேவை வழங்கல் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் பயனுள்ள கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன. கலந்துகொண்ட உத்தியோகத்தர்கள் தங்களது அனுபவங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டு, நேர்மையை அடிப்படையாகக் கொண்ட சேவை பண்பாட்டை மேலும் வலுப்படுத்துவதன் அவசியத்தை உணர்ந்தனர்.
"வெளிப்படையான நேர்மைமிக்க செயற்பாட்டு வலையமைப்பு "

- பிரிவு: News & Events
நேர்மை வாரம் 2026 – நாள் 05
சுற்றாடல், வளம், கிராமிய மற்றும் சமூக வலுவூட்டல் – நேர்மையை வெளிப்படுத்தும் நாள்
31.07.2026
"நேர்மைக் கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட நேர்மை வாரம் 2026 நிகழ்வுகளின் ஐந்தாவது நாள் நிகழ்ச்சியாக, கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தூய்மையை மேம்படுத்தும் விசேட சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்று, அலுவலகத்தின் வெளிப்புறச் சூழலை சுத்தம் செய்ததுடன், பொதுச் சுகாதாரத்தைப் பேணும் நோக்கில் டெங்கு நோய் பரவலைத் தடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். குறிப்பாக, டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டு சுத்தம் செய்யப்பட்டதுடன், மழைநீர் தேங்கும் பாத்திரங்கள், பயன்படுத்தப்படாத பொருட்கள் மற்றும் கழிவுப்பொருட்கள் அகற்றப்பட்டு, சுற்றுப்புறம் தூய்மையாக பராமரிக்கப்பட்டது.
மேலும், தூய்மையான பணிச்சூழல் உத்தியோகத்தர்களின் ஆரோக்கியத்தையும் பணித் திறனையும் மேம்படுத்துவதோடு, பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்கான நல்ல சூழலை உருவாக்கும் என்பதும் இந்நிகழ்வின் மூலம் வலியுறுத்தப்பட்டது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது ஒவ்வொருவரினதும் சமூகப் பொறுப்பாகும் என்பதையும், சுத்தமான சூழல் ஆரோக்கியமான சமூகத்திற்கான அடிப்படையாகும் என்பதையும் இந்நிகழ்வு எடுத்துக்காட்டியது.
நேர்மை என்பது அலுவலக நிர்வாகத்தில் மட்டுமன்றி, சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், பொதுச் சொத்துக்களைப் பேணுதல் மற்றும் சமூக நலனை முன்னிறுத்தும் செயல்பாடுகளிலும் வெளிப்பட வேண்டும் என்ற செய்தியை இந்நிகழ்வு வலியுறுத்தியது.
"நிலையான நேர்மைமிக்க பசுமை கலாச்சாரம் "

- பிரிவு: News & Events
நேர்மை வாரம் 2026 – நாள் 03
நேர்மைக் கலாசாரம் – தூய்மையான இலங்கை தேசிய வேலைத்திட்டம்
29.07.2026
நேர்மைக் கலாசாரம் – "தூய்மையான இலங்கை"தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், நேர்மை வாரம் 2026 நிகழ்வுகளின் மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக, தட்டுமுனை ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் இன்று காலை அறநெறி பாடசாலை மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்காக தியானம் மற்றும் ஆன்மீக நெறிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் விளக்க நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்/ககு/கதிரவெளி விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்தின் அதிபர் திரு. பொன். இராமச்சந்திரன் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டு, மாணவர்களிடையே நேர்மை, ஒழுக்கம், பொறுப்புணர்வு, பரஸ்பர மரியாதை குறித்து பயனுள்ள கருத்துரைகளை வழங்கினார்.
மேலும், ஆன்மீகப் பயிற்சிகள், தியானத்தின் முக்கியத்துவம் மற்றும் அறநெறி வழிமுறைகள் தனிநபர் பண்பாட்டை மேம்படுத்துவதோடு, நேர்மையான சமூகத்தை உருவாக்குவதிலும் முக்கிய பங்காற்றுகின்றன என்பதும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரிவுக்கான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அறநெறி பாடசாலை ஆசிரியர்கள், ஆலய பூசகர், ஆலய நிர்வாகத்தினர், மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இத்தகைய விழிப்புணர்வு நிகழ்வுகள் மூலம் நேர்மை, நல்லொழுக்கம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை அடுத்த தலைமுறையினரிடையே வளர்த்தெடுக்கும் முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


















